Kizhvanam
  • Home
  • Articles
    • Articles1
  • CommonNews
  • TamilFonts
    • TamilFonts cont...1
    • TamilFonts cont...2
    • TamilFonts cont...3
    • TamilFonts cont...4
    • TamilFonts cont...5
    • TamilFonts cont...6
    • TamilFonts cont...7
  • Tutorials
  • Notices
  • Contacts
Picture
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உயரும்  நன்மையே......
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும்  தீமையே..."  
 
என்ற பாடல் வரிகள் நமக்கு நினைவிருக்கின்றன  அல்லவா!
எவ்வளவு தெளிவாக ஒற்றுமை, வேற்றுமை பற்றி தனது சமுதாயத்திற்கு
எப்போதோ சொல்லி சென்றுள்ளான் மக்கள் கவிஞன். ஆனால் ஒற்றுமை
என்பது  இன்றைய பொழுதிற்கு ஒருவரிடமும், ஒருவிடயத்திலும்,
தனி மனிதர்களிடமோ, குடும்ப உறவுகளிடமோ, நெருங்கிய நண்பர்களிடமோ,
இன்னும் சொல்லப்போனால் சாதி, மத, மொழி அடிப்படையிலோ,
மாநிலத்திற்கு மாநிலமோ,மாகாணத்திற்கு மாகாணமோ,  மாவட்டத்திற்கு
மாவட்டமோ ஏன் நாட்டுக்கு நாடோ கிடையவே கிடையாது என்பதுதான்
உண்மை.எல்லாவித கட்டமைப்புகளுக்கும் அதாவது அரசியல், சமூகம், பொதுவாழ்வு,
குடும்ப வாழ்வு என்று சகல வாழ்வியல் வட்டங்களுக்கும் மிக முக்கியம் ஒற்றுமையாகும்.


__________________________________________________________________________________________________________________________

Picture
"நெஞ்சில் உரமும்மின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை
செய்வாரடி கிளியே..வாய்ச்சொல்லில் வீரரடி"...

ஆகா...  எவ்வளவு அழகாக சொல்லிச்சென்றான் பாரதி . சமூகத்தின் சாக்கடைகளை
சாடிச்சாடி நாறடித்த அந்த மகா  கவிஞனின் கருத்தியலையும், உன்னதமான  
கவித்துவத்தையும் வைத்துத்தான் இன்றும் தமிழ் கவியுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" 
 
ஆம்! இன்று எம்மத்தியில் வாழும் பலருக்கு இருக்கும் "படாடோபத்துக்கும்", 
"பவுசுகளுக்கும்" ஆடம்பரத்துக்கும், அட்டகாசத்துக்கும் அளவே இல்லாமல் 
போய்விட்டது. இதை பார்ப்பதற்கும்,  கேட்பதற்கும் முடியவில்லை. 
வஞ்சனையும், வக்கிரமும், சூழ்ச்சியும், பொறாமையும், சூதும், வாதும், 
உற்றவர்களையும், மற்றவர்களையும் தாழ்வாக, தரக்குறைவாக பேசும் தன்மையை 
பலர் எம்மிடையே கொண்டிருக்கிறார்கள். 
 
ஆனால் இவர்களுக்கு தங்களின் முன்னைய நிலைமை, தங்களின் குடும்பபின்னணி,
தங்களின் இப்போதைய நிலைக்கு  காரணமாக இருந்தவர்கள் யார்? என்பதெல்லாம் 
தெரிவதில்லை. ஏன் ஏறிவந்த ஏணியையே உதைத்து தள்ளும் உள்ளம் கொண்டவர்கள் 
இவர்கள். வாயில்லாவிட்டால் இவர்களால் வாழமுடியாது. ஆனால் அதே வாய்தான்
இவர்களை  அடையாளமும் காட்டும். 

"இட்டுக் கெட்டவன்  கர்ணன்...
இடாமல் கெட்டவன் துரியன்...
தொட்டுக் கெட்டவன்  இந்திரன்..
தொடாமல் கெட்டவன் இராவணன்"

என்று  சொல்வார்கள் இவர்கள்  வாயாலே  கெட்டவர்கள்....
இப்படி பலர் எம்மிடையே  வாழ்கின்றார்கள். 
 
தாய் நாட்டில் வாழ்ந்தபோது எப்படியிருந்தோம் என்று கொஞ்சமும்
எண்ணாமல், ஏதோ  தாங்கள்  வசதியாகவும்,  உசத்தியாகவும் வாழ்ந்ததுபோல் 
நினைத்துக்கொண்டு  தப்பிலிகள்போலே தம்பட்டம் அடிக்கிறார்கள்.  

"உண்டானபோது கோடான கோடி  
  உரையுரைவார்...இல்லாதபோது
  கண்டாலும்  பேசார் கண்ணெடுத்தும் பாரார்    
  சண்டாளர்கள் சகவாசம் வேண்டாம்"  

என்று  கொடுத்து  கெட்டவர்கள் சொல்வதுண்டு. வாங்கி வயிறார உண்டவர்களும்,
வாய் நிறைய நன்றி சொன்னவர்களும்  இன்று  ஓங்கி, ஒருசுற்று பெருத்து, மேற்குலக
நாடுகளில்  வாழ்கிறார்கள்.  காசையும், பொருளையும், காரையும், வீடையும்
ஆடம்பர வாழ்வையும்  கண்ட  இவர்களுக்கு  கண்மண் தெரிவதில்லை,
கதைபேச்சில்  சுத்தமில்லை.  எப்படி  இருந்த நாம், இன்று  இப்படி வருவதற்கு
யார் காரணம்? அல்லது  எதனால் இந்த  வாழ்க்கை வந்தது,  என்றெல்லாம்
எண்ணுவதில்லை. மாறாக வாய்க்கு  வந்தபடி பேசுகிறார்கள்.

மற்றவர் மனங்களை காயப்படுத்துகிறார்கள்.  திமிர்  பிடித்து திரிகிறார்கள்.
தினம் தினம்  தப்பு  பண்ணுகிறார்கள். ஊரில் உள்ள  சொந்தங்களுக்கும்,
உறவுகளுக்கும் உதவ  வேண்டும் என்பது நல்ல  மனசுக்காரர்களுக்கு ஏற்படும்
உணர்வுதான். அதை நல்ல  முறையில்  பண்ணவேண்டும்.
"வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது" என்பதுபோல் அந்த உதவி
இருக்கவேண்டும்.  ஆனால் எம்மில்  சிலர் எப்போதாவது இருந்துவிட்டு உதவும்
போதும் அல்லது ஊருக்கு சென்று சொந்தங்களை பார்க்கும்போதும் அவர்கள்
மனம் நோகும்படி பேசுவதும், அவர்களை குத்திக்காட்டி நெஞ்சை ரணப்படுத்துவதும்
தங்களுக்கு  சந்தோசத்தை தருகிறது என்று  நினைக்கிறார்கள். ஆனால் அதே ஊர்களில் 
இவர்கள் எப்படி இருந்தவர்கள்  என்று எண்ணிப் பார்க்க மறக்கின்றார்களா?

அல்லது மறந்தபடி நடிக்கின்றார்களா? என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
உதவி செய்யாவிட்டாலும் இவர்கள் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதுமே.

விடுப்பில் ஊருக்கு செல்லும் ஒரு சிலர்  தங்கள் செருக்கையும், செழுமையையும்
காட்டுவதற்காக உறவுகளுடன் இல்லாத பொல்லாத, தேவையற்ற கதைகளை பேசி
அவர்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவதுடன், இவர்களை பற்றி ஊரவரும்,
உறவினரும் மதிப்பிடுவதற்கும், இவர்களின் குணநலங்கள் பற்றி விமர்சிப்பதற்கும்
ஆளாகுறார்கள்.

'ஊருக்கு போனமா வந்தோமா'  என்று இல்லாமல் வீணாக வாயை கொடுத்து
வாங்கி  கட்டிக்கொள்வது  இவர்கள்  வாடிக்கையாகிவிட்டது.
நாம் வாழும் காலம் சிலகாலம்தான் அதை உறவோடு 
வாழ்ந்தால் பூக்கோலம்தான். என்பதை இவர்கள் உணர்வதுமில்லை.

உறவுகளுக்கிடையே சிண்டுமுடித்து பார்த்து மகிழ்வதை  இவர்கள்
விடுவதுமில்லை.

இவர்கள்
மாறுவார்களா?  மாட்டார்களா?


_____________________________________________________________________________________________________

Picture
Picture
வளர்ந்துவிட்ட இன்றைய நாகரிக, நவீன உலகிலே  பெற்றோர்களின்
நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. தாயகத்திலும்சரி,  புலத்திலும்சரி
எமது பெற்றோர்கள் பல்வேறுபட்ட மனஉளைச்சல்களில்  வாழ்கிறார்கள்.
இவர்கள் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த  நிலை
இவர்களுக்கு வருவதற்க்கு  காரணம்  இவர்களின்  பிள்ளைகளேதான் என்று
பலர் சொல்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை சிறுவயதுமுதல் பெரியவர்களாக்கும் வரை 
தங்கள் அரவணைப்பில்  வளர்த்து ஆளாக்குகிறார்கள். அதாவது  பிறந்ததிலிருந்து 
மூன்றுவயதுவரை அக்குழந்தைக்கு  பேசக்கற்றுக்கொடுக்கிறார்கள்.
அதன்பின்பு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி கல்வியறிவையும், மற்ற  விடயங்களையும்
அறிய வழிசெய்கிறார்கள். பள்ளிப்படிப்பை தொடரும்போதே பல  நுண்கலைகளையும் 
அவர்களுக்கு  பகுதி நேரமாக கற்க ஏற்பாடு செய்கிறார்கள்.  பள்ளிப்படிப்பு முடிந்ததும்
மேற்படிப்புக்காக தங்கள் பிள்ளைகளை  அனுப்ப படாதபாடுபடுகிறார்கள்.
பட்டப்படிப்பு முடிந்ததும் மிகவும்  சந்தோசப்படும் இவர்கள், பிள்ளைகள் வேலை 
ஒன்றை தேடிக்கொண்டபின்தான் மனம்  ஒடிந்துபோகிறார்கள். அதற்கு காரணம் 
பிள்ளைகளின் நடவடிக்கையே. இருந்தாலும்  பெற்றகடமைக்காக இவர்களுக்கு 
மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதில் அக்கறை  எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் சில பிள்ளைகள் இதற்கும் இவர்களுக்கு சந்தர்ப்பம்  அளிப்பதில்லை.
தங்களுக்குரிய துணைகளை தாங்களாகவே தேடிக்கொள்கிறார்கள். 

இன்றைய  இளைஞர்கள் தங்களின் பெற்றோர்கள் செய்த  எல்லாவற்றையும் 
மறந்துவிட்டு அவர்களை  தங்களின் தாய், தந்தை என்ற மரியாதை  இல்லாமல் 
நடத்துவதும், தாங்களாகவே  முடிவெடுப்பதும், எல்லாவற்றையும்  செய்துமுடித்துவிட்டு 
வந்து ஒரு  பேச்சுக்கு பெற்றிறோரிடம் சொல்வதும்  என்று, பெற்றவர்களை காயப்படுத்துகிறார்கள்.
இன்னும் சில பிள்ளைகள்  ஒருபடி மேலேபோய் பெற்றோரை முதியோர் பராமரிப்பு
இல்லங்களிலும்  சேர்த்துவிடுகின்றனர். தங்கள் பெற்றோருடன் கூடி வாழ்வதையே
இவர்கள் சங்கடமாக  நினைக்கிறார்கள். தாய்தந்தையினரின் உணர்ச்சிகளை
புரிந்துகொள்ளாதவர்களாக  இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் நாகரீகம் வேண்டும்  என்பதற்காக தங்களைப் பெற்றவர்களையே 
உதாசீனப்படுத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகளை மார்மேலும், தோள்மீதும் போட்டு
வளர்த்து கல்வியையும், வாழ்வியலையும் கற்றுக்கொடுத்து  அவர்களை  ஆளாக்கி
விட்டுவிட்டு இன்று பல பெற்றோர் மனமொடிந்து, நொந்து  நூலாகி  இருக்கிறார்கள்.

சில பெற்றோர் நோய்வாய்பட்டு மருத்துவமனைகளில்  வருந்தும்பொழுது
பாசத்துடன் வந்து தொட்டுப்பார்த்து, தூக்கிச்சாற்றி  பாசம்காட்டாமல் ஏதோ
பிறத்தியார்போல தள்ளிநின்று பார்த்துவிட்டு சாட்டுக்கு  "எப்படி இருக்கிறீர்கள்"
"டாக்டர் என்ன சொன்னார்" என்ற சம்பிரதாய  கேள்விகளைமட்டும்
கேட்டுச் செல்கிறார்கள். சில பிள்ளைகள் நெஞ்சிலே  ஈரமே  இல்லாமல்
" நீங்கள் இருப்பதைவிட சாவதே மேல்" என்றும் சொல்வதுண்டு.  இதனால் பல
பெற்றோர்கள் மனம்நொந்து தனியாகவே சென்று வாழ்கிறார்கள்.  புலம்பெயர்ந்த
நாடுகளிலே மனிதநேயமும், மனிதமும் போற்றப்படுவதால் பிள்ளைகளால்
கைவிடப்பட்டவர்கள்,  இவர்களைவிட்டு  ஒதுங்கிக்கொள்கிறார்கள். பணத்திற்கும்,
பொருளுக்கும்,  சொத்துக்குமாகவே பெற்றோர் என்ற நிலையே  இன்றைய 
இளைஞர்களிடம் இருக்கிறது.  தாய்நாட்டிலே, தங்கள்  கிராமத்திலே, 
ஊர்ப்பள்ளிகளிலே இவர்களை  படிப்பித்திருக்கவேண்டும், அப்பொழுது தெரியும் 
இவர்களுக்கு கஷ்டம். இவர்களை மேற்குலக நாடுகளுக்கு கொண்டுவந்து
ஆளாக்கிவிட்டது தாங்கள் செய்த மகா மடத்தனம்  என்று பல பெற்றோர்கள்
சொல்கிறார்கள்.

தங்களின்  பிள்ளைகளின் வளர்ச்சி, முனேற்றம், உயர்ச்சி,
மேன்மை என்ற படிகளுக்காக பல  கஷ்டங்களை கடந்து இவர்களை உயர்த்திவிட்ட
இந்த  பெற்றோர்கள், இன்று  சொல்கிறார்கள், இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காக
நாங்கள் ஏன்தான் செய்தோம்  என்று  நினைக்க  தோன்றுகிறது என்று.
ஆக,பெற்றோர்களின்  உணர்ச்சிகளை  புரிந்துகொண்டு அவர்களின் ஆயுட்காலம்வரை 
அவர்களிடம் அன்புடன்  நடந்துகொள்ள இன்றைய பல பிள்ளைகள் தவறிவிடுகிறார்கள்.
பெற்றோர்கள்தான் நமது  கண்கள், அவர்கள் இல்லாமல் நாம் இந்த உலகத்தையே 
பார்க்கமுடியாது. நமது  கண்களை  நாமே பிடுங்கி ஏறிய முடியுமா? என்று
இன்றைய  இளைஞர்கள்  ஏன் சிந்திப்பதில்லை? பெற்றோர்கள் நமது
வாழ்க்கைக்கு வழிகாட்டிகள் . அவர்கள்  நம்மை பெறாவிட்டால் நாம் இந்த
பூமியில் வந்திருக்க முடியுமா? என்று ஏன்  இன்றைய பிள்ளைகள்
நினைக்கிறார்கள் இல்லை? என்ற கேள்விகளை பல பெற்றோர்  கேட்கிறார்கள்.
இவர்களின் இந்த கேள்விகளுக்கான பதில்கள்  என்னவாக 
இருக்கமுடியும்?
____________________________________________________________________________________
Powered by Create your own unique website with customizable templates.